Tuesday, February 12, 2019

பிப்ரவரி-12 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

 
          தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே
              சடைமேற் கங்கைவெள்ளம் தரித்த தென்னே
          அலைக்கும் புலித்தோல் கொண்டசைத்த தென்னே
              அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
          மலைக்குந் நிகர்ஒப் பனவன் திரைகள்
              வலித்தெற்றி முழங் கிவலம் புரிகொண்(டு)
          அலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
        மலைபோல் உயர்ந்த பெரிய அலைகள் வலம்புரிச் சங்குகளை இழுத்து வந்து வீசி மோதுகின்ற கடல் கரைகளையுடைய மகோதை என்னும் நகரத்தில் அழகிய சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிக்கின்ற தந்தையே! நீ தலைக்கு அணிகலமாகத் தலைமாலையை அணிந்தது ஏன்? சடையின் மேல் கங்கையாற்றைத் தாங்கியது ஏன்? புலியின் தோலை அணிந்தது ஏன்? அவ்வுடையின் மேல் பாம்பைக் கச்சாகக் கட்டியது ஏன்?
       (இவை பாசத்தை நீக்குதல் என்னும் குறிப்பு)   


திருவாசகம்

 மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி
மலம் கெடுத்த பெருந்துறை
  விலங்கினேன் வினைக்கேடனேன் இனி
  மேல் விளைவது அறிந்திலேன்
            இலங்குகின்ற நின் சேவடிகள்
  இரண்டும் வைப்பிடம் இன்றியே
            கலங்கினேன் கலங்காமலே வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.

     பிறவித் துயரால் கலங்கி நின்ற என் கண்ணீரை மாற்றி, பாசமெனும்  மாசினை நீக்கிய உன்னை விட்டு நீங்கினேன்.   பெருந்துறைப் பெருமானே உனதடியாரோடு செல்லாமல் விலகினேன்.   தீவினையாளனாகிய நான் இனிமேல் நிகழக் கூடியதையும் அறியேன்ஒளிர்கின்ற நின் திருவடிகளைத் தாங்கும் பேறு என் தலைக்கு இல்லாது போயிற்றே என்று கலங்கினேன்அங்ஙனம் நான் மயங்கத் தேவையில்லை என்று கூறும் வகையில் திருக்கழுக் குன்றத்திலே நின் திருவருட் கோலத்தைக் காட்டி அருளினாய். ஈசனே உனைப் போற்றுகிறேன்.   






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning          

No comments:

Post a Comment